கமல் எதுவும் தவறாகப் பேசவில்லை... ஆதரவு கொடி பிடிக்கிறார் ராதாரவி
தமிழக அரசு மீதான கமலின் விமர்சனம் சரியானது. அவர் எதுவும் தவறாகப் பேசவில்லை என்று நடிகர் ராதாரவி கூறினார்.
தர்மபுரி: தமிழக அரசு பற்றி கமல் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் பேசியது சரிதான் என்று நடிகர் ராதாரவி கமலுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்க வந்த ராதாரவி, செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசியது: தமிழக அரசு மீது கமல் தெரிவித்த விமர்சனம் சரியானது. அவர் எதுவும் தவறாகப் பேசவில்லை. ஆனால், தமிழக அமைச்சர்கள் மிகக் கடுமையாக, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கின்றனர். இது தவறானது. வாக்குரிமை படைத்த அனைவருமே விமர்சனம் செய்யலாம். அவர் திறமையான கலைஞர். நடிகர் என்ற அடிப்படையில் அவருக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.
ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதனை நிறைவேற்றலாம். சாலைகள் சரியில்லை, அதை சீர் செய்யலாம். சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கணக்கில் கட்டணங்களை வசூலிக்கின்றனர். இதனை முறைப்படுத்தலாம். பாஸ்போர்ட்டில் இந்தியைத் திணித்துள்ளனர். இதை எதிர்க்கலாம். இப்படி அமைச்சர்கள் செய்ய வேண்டியப் பணிகள் ஏராளமாக உள்ளன.
ஆந்திர முதல்வர் நதிகளை இணைத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை. இதற்கு முன் ரஜினி கூட விமர்சனம் செய்திருந்தார். ஆனால், அது குறித்து எதுவும் பேசாதவர்கள், இப்போது மட்டும் பேசுவது ஏன்?. போராட்டம் நடத்துவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வது என்பது, சர்வாதிகார மனநிலைக்கு இட்டு செல்லும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க குறைந்தபட்சம், நீட் தேர்வில் விலக்கு கோரியிருக்கலாம். மாட்டிறைச்சி விவகாரம், ஹைட்ஹோ கார்பன் திட்டம் ரத்து அல்லது காவிரி மேலாண் வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் வாக்களிப்பேன் என அழுத்தமாவது கொடுத்திருக்கலாம். ஆனால், இவை எதையும் தமிழக அரசு செய்யவில்லை என்றார்.
பேட்டியின்போது, முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க நிர்வாகி சிங்கார வேலு உடனிருந்தார்.