சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணித் தலைவியானார் ராதிகா
திருநெல்வேலி: நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணித் தலைவியாக அவரது மனைவி நடிகை ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய நடிகை ராதிகா, மகளிருக்காக தனியாக ஒரு மாநாட்டை சமத்துவ மக்கள் கட்சி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் சரத்குமார் பேசும்போது, கட்சியின் மாநில மகளிரணித் தலைவி பொறுப்பை ராதிகா ஏற்றால் மாநாடு நடத்த உடனடியாக ஒப்புதல் அளிப்பதாக உறுதியளித்தார்.
அதற்கு சரி என மாநாட்டுப் பந்தலிலேயே ராதிகா ஒப்புதல் தெரிவித்தார். இதையடுத்து, இன்றுமுதல் மாநில மகளிரணித் தலைவியாக ராதிகாவை நியமிப்பதாகவும், மகளிர் அணி மாநாடு நடத்தப்படும் எனவும் சரத்குமார் அறிவித்தார்.
இதுவரை சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகராக ராதிகா இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.