தீபா பேனர்களால் மக்கள் "ஜாம்".. கொந்தளித்த டிராஃபிக் ராமசாமி.. ஓடி வந்து அகற்றிய போலீஸ்!
சென்னை தியாகராயர் நகர் பகுதியில் தீபாவிற்கு ஆதரவாக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி குற்றஞ்சாட்டியதையடுத்து அவை அகற்றப்பட்டன.
சென்னை : தீபாவிற்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி புகார் அளித்ததையடுத்து அவை அகற்றப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபாவின் வீடு தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது வீட்டு முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். அப்போது வீட்டு முன்பு பேனர்களையும் வைத்தனர்.
தற்போதும் தீபா வீட்டு எதிரே பெரிய பேனர் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த சாலையில் ஆங்காங்கே பேனர்கள் ஆதரவாளர்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தி.நகர் சிவஞானம் தெருவில் தீபா வீட்டு முன்பு உள்ள பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி அவற்றை அப்புறப்படுத்த முயற்சித்தார்.
வாக்குவாதம்
அதுபற்றி தகவல் அறிந்ததும் தீபா ஆதரவாளர்கள் அங்கு வந்து டிராபிக் ராமசாமியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாம்பலம் போலீசார் அங்கு சென்று தீபா ஆதரவாளர்களை சமாதானம் செய்தனர். இதனையடுத்து போலீசார் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பேனர்கள் அகற்றம்
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று தி.நகர் சிவஞானம் தெருவில் தீபாவிற்கு அதரவாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றினர். மேலும் பேனர் அகற்றப்படுவதால் பிரச்னை வராமல் இருக்க முன்எச்சரிக்கையாக அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஜெ. பேனர்களை அகற்றியவர்
தமிழகமெங்கும் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றும் முயற்சிகளை தொடர்ந்து செத வருகிறார் டிராஃபிக் ராமசாமி. ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அவரது நிகழ்ச்சிகளுக்காக வைக்கப்படும் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார்.
பங்காரு அடிகள் பேனர்
கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாருக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினார். அப்போது பங்காரு அடிகளாரின் ஆதரவாளர்களால் டிராஃபிக் ராமசாமி தாக்குதலுக்கும் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.