வேந்தர் மூவிஸ் மதன் மீது நடிகர் ராகவா லாரன்ஸ் போலீஸில் புகார் !
சென்னை: வேந்தர் மூவிஸ் மதன் மீது நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஆகியோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன். இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 15 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும்புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நிறுவனம் சார்பாக வெளியிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தில் தவித்து வந்தார் மதன்.
இதையடுத்து கங்கையில் சமாதியாகப் வோவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார் மதன்.
இதன் பின்னர் திருப்பூரில் பெண் ஒருவருடன் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதனை சென்னை போலீசார் அண்மையில் கைது செய்தனர்.
முன்னதாக ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா ஆகிய இரு படங்களையும் மதன் தயாரித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி ராகவா லாரன்ஸ் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதில் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சிலர் இடையூறு செய்து வருவதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கூறியுள்ளனர்.