அன்னையர் தினம்- அம்மாவுக்கு கட்டிய கோவிலை திறக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்காக கட்டிய கோயிலை, அன்னையர் தினமான ஞாயிறன்று திறக்க உள்ளார்.
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்கு கட்டியுள்ள கோயிலை அன்னையர் தினமான ஞாயிறன்று திறக்க உள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்ராயன் அந்த கோவிலை திறந்து வைக்க உள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சொந்தச் செலவில் ராகவேந்திரருக்கு கோயில் கட்டியுள்ளார். இந்தக் கோயில், சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ளது.
தற்போது அந்த கோயிலுக்கு எதிராக தனது அம்மா கண்மணிக்கு கோயில் ஒன்றையும் கட்டியுள்ளார்.
உலகிலேயே அம்மாவிற்காக கோவில் கட்டியுள்ள முதல் நடிகர் ராகவா லாரன்ஸ் சர்வதேச அன்னையர் தினத்தில் அதனை திறந்து வைத்துள்ளார்.
அம்மா கோவில்
அந்த கோயிலில், அவருடைய அம்மா கண்மணியின் 5 அடி உயர முழு உருவச் சிலையை வைத்துள்ளார். அந்தச் சிலை ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டது.
அன்னையர் தினம்
ராகவா லாரன்ஸ் தனது அம்மாவிற்காக கட்டிய கோயிலை, அன்னையர் தினமான நாளை திறக்க உள்ளார். ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் இந்த சிலையை காலை 8 மணிக்கு திறந்து வைக்கிறார். இந்த விழாவில் மேலும் சில முக்கிய திரை பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
அன்னையும் தெய்வமும் ஒன்று
ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள அம்மா கோவிலில் 13 அடி உயரம் உள்ள காயத்திரி தேவியின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. கடவுளும், பெற்ற தாயும் ஒன்றுதான் என்று உலகுக்கு நிரூபிக்கும் கோவிலாக இது இருக்க வேண்டும் என்பதற்காக அந்த காயத்திரி தேவி சிலைக்கு கீழேயே தனது தாயின் சிலையையும் லாரன்ஸ் நிறுவி உள்ளார்.
ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
உள்ளத்திலும் இல்லத்திலும் வைத்து போற்றி பாதுகாக்க வேண்டிய தாயை தயவு செய்து அனாதை இல்லத்தில் விட்டு வேதனைப்படுத்த வேண்டாம், என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரர் கோவிலும், அம்மா கோவிலும் ரசிகர்களையும், பக்தர்களையும் அதிகம் கவரும்.