பிரஸ்ஸல்ஸில் பலியான ராகவேந்திரன் கணேசனின் உடல் சென்னையில் தகனம்
சென்னை: பிரஸ்ஸல்ஸ் மெட்ரோ ரயில் தாக்குதலில் பலியான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசனின் உடல் சென்னை, சிட்லபாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் பணியாற்றி வந்தவர் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன். அவர் கடந்த 22ம் தேதி மெட்ரோ ரயிலில் பணிக்கு சென்றபோது அதே ரயிலில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.இதில் ராகவேந்திரன் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து அவரது உடல், ஆம்ஸ்டர்டாம் வழியாக செவ்வாய்க்கிழமை மாலை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தமிழக அமைச்சர் வளர்மதி, பாஜக மாநில தலைவர் தமிழிசை, திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கணேசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சிட்லப்பாக்கம் மின்மயானத்தில் ராகவேந்திரன் கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பெல்ஜியத்திலிருந்து ராகவேந்திரன் கணேசனின் உடலை கண்டறிந்து, சென்னை கொண்டு வர இந்திய தூதரக அதிகாரிகள் பெரிதும் உதவியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.