ராமமோகன் ராவ் மடத்தனமாக பேசுகிறார்- மாஜி சிபிஐ இயக்குநர் ரகோத்தமன் சீற்றம்!
வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ராமமோகன் ராவ் மடத்தனமாக பேசுவதாக ரகோத்தமன் சாடியுள்ளார்.
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகன் ராவ்-க்கு வருமான வரி சோதனை தொடர்பான அடிப்படை விதிகளே தெரியவில்லை- மடத்தனமாக பேசுகிறார் என சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் சாடியுள்ளார்.
ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்தார் ராமமோகன் ராவ்.
இந்த நிலையில் திடீரென ராமமோகன் ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தார் ராமமோகன் ராவ்.
அவரது இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கூறியதாவது:
வருமான வரி சோதனை நடத்தப்படும்போது எவரது பெயரும் குறிப்பிடப்படாது. இடத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும். ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு இந்த அடிப்படை விதியே தெரியவில்லை. அவர் மடத்தனமாக பேசுகிறார்.
வருமான வரி சோதனை நடத்தும்போது மத்திய போலீஸ் பாதுகாப்பு படையை அழைத்துச் செல்ல உரிமை உண்டு. தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்துவதற்கு உரிமை உண்டு.
இத்தனைக்கும் தலைமை செயலகத்தில் சோதனை நடந்த போது முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகையால் அவரது ஒப்புதலுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ரகோத்தமன் கூறினார்.