தமிழக காங். தலைவராக ப. சிதம்பரம் ப்ளஸ் செயல் தலைவர்கள்.. ராகுல் வகுக்கும் அடடே வியூகம்
தமிழக காங். தலைவராக ப.சிதம்பரத்தை நியமிக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளாராம்.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ப.சிதம்பரமும் அவருக்கு துணையாக செயல் தலைவர்களையும் நியமிக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக தேர்தல் முடிந்ததும் தமிழகத்தை குறிவைத்து களமிறங்க இருக்கிறது பாஜக. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்துவிடக்கூடாது என்பதுதான் பாஜகவின் முக்கிய வியூகம்.
இதனை சோனியாவும் ராகுலும் உணர்ந்துள்ளனர். அண்மையில் டெல்லியில் மாநாடு ஒன்றை நடத்தினார் ராகுல் காந்தி. இம்மாநாடு முடிந்ததும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அழைத்து 1 மணி நேரம் விவாதித்திருக்கிறார் ராகுல்.
அதில், லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் பாஜக திட்டமிட்டுள்ள வியூகத்தை விவரித்து அந்த அரசியலை முறியடிக்க உங்களால்தான் முடியும். அதனால், நீங்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, இதே கோரிக்கையை ராகுல் வைத்தபோது மறுத்தவர் ப.சிதம்பரம். அதேபோல இப்போதும் வயதை காரணம் காட்டி மறுக்கவே செய்தார். ஆனால், ராகுல் காந்தி, தலைவர் பதவியிலிருந்து மேற்பார்வை அரசியலை கவனியுங்கள்.
உங்களுக்கு உதவியாக செயல்தலைவராக சிலரை நியமிக்கிறேன். அவர்கள் உங்களுக்கு உதவுவதோடு அவர்களை நீங்கள் வேலை வாங்குங்கள் என சொல்லியிருக்கிறார் ராகுல்காந்தி. தற்போது தங்கபாலு உள்ளிட்ட பலர், செயல்தலைவர் பதவியைக் கைப்பற்ற டெல்லிக்கும் சென்னைக்குமாகப் பறந்து கொண்டிருக்கிறார்கள். ஓரிரு மாதங்களில் திருநாவுக்கரசு மாற்றப்படலாம் என்பதே தற்போது காங்கிரஸ் மேலிடத்தில் எதிரொலிக்கும் ஹாட் டாக் என்கிறார்கள் கதர் சட்டையினர்.