மோடியும், ஜெயலலிதாவும் ஒரே மாதிரியான ஆட்சியாளர்கள் தான் - கோவையில் ராகுல் பேச்சு
கோவை: பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒரே மாதிரியான ஆட்சியாளர்கள் தான். தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று இருவரும் நினைத்து கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுலுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் கோவையில் திமுக எம்பி கனிமொழியுடன் பிரசாரம் செய்தார்.
கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வணக்கம் எனக் கூறி தனது பிரசாரத்தை தொடங்கிய அவர், தமிழகத்தின் ஜீவ நதியாக காவிரியாக உள்ளது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த யாரும் காவிரி நீரை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீர் எதிர்காலத்தை தரும் வகையில் உள்ளது.
பெருந்தலைவர் காமராஜர், எம்ஜிஆர் மக்களுக்கு தொண்டு செய்யும் தலைவர்களாக இருந்துள்ளனர். காமராஜரும், கருணாநிதியும் மக்களுக்காக தொண்டாற்றிய மண் இந்த தமிழ்நாடு. நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தை தொடங்கியவர் காமராஜர் தான். ஏழைகளின் தேவையை மிகவும் உணர்ந்திருந்தவர் காமராஜர்.
பிரதமர் மோடியும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஒரே மாதிரியான ஆட்சியாளர்கள் தான். தங்களுக்கே எல்லாம் தெரியும் என்று இருவரும் நினைத்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடப்பதில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுகிறது. அதேபோல்
சென்னையில் வெள்ளம் வந்தபோது எங்களுடைய தலைவர்கள் கதவுக்கு பின்னால் உட்கார்ந்து கொள்ள வில்லை. மக்களை சந்தித்து உதவி செய்தனர். நான் டெல்லியில் இருந்து வந்து மக்களை சந்தித்தேன். ஆனால் ஜெயலலிதா வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார். ஜெயலிலதா ஆட்சியில் தமிழகம் பின்தங்கிவிட்டது.
அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவசங்கள் எல்லாம் பழுதானவை. மிக்ஸி கொடுத்தார். ஆனால் சில நாட்களிலே அதுவும் பழுதாகிவிட்டது. ஜெயலிலிதா ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரி்த்தாடுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். அதிமுகவின் மதுக்கொள்கை குழந்தைகளை அனாதையாக்கியுள்ளது. 1800 ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டில் 6800 ஆக உயர்ந்துவிட்டது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெறும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவோம். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை தருவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.