ஜெ.வை போல் கருணாநிதிக்கும் மெரினாவில் இடம் தாருங்கள்- ராகுல் வலியுறுத்தல்
ஜெயலலிதாவை போல் கருணாநிதிக்கும் மெரினாவில் இடம் தர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் தர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
உடல்நல குறைவால் மறைந்த கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோரியது திமுக. ஆனால் தமிழக அரசோ அங்கு சட்ட சிக்கல் உள்ளதால் காந்தி மண்டபத்தில் காமராஜர் சமாதிக்கு அருகில் இடம் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தது.
இதை எதிர்த்து திமுக நீதிமன்றத்தை நாடியது. தமிழக அரசை கண்டித்து தொண்டர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என்று ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதே போல் ராகுல் காந்தியும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தர வேண்டும்.
Like Jayalalitha ji, Kalaignar was an expression of the voice of the Tamil people. That voice deserves to be given space on Marina Beach. I am sure the current leaders of Tamil Nadu will be magnanimous in this time of grief. #Marina4Kalaignar
— Rahul Gandhi (@RahulGandhi) August 7, 2018
மக்களின் குரலாக எதிரொலித்த ஜெ.வை போல் கருணாநிதிக்கும் இடம் கொடுக்க வேண்டும். தமிழக மக்களின் குரலாக இருந்த கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதே சரியானது. இந்த துக்கமான தருணத்தில் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வர் என்று நம்புகிறேன் என்று ராகுல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.