வெறும் காலுடன் வெள்ளநீரில் நடந்த ராகுல்... ‘ஓட்டு’ படுத்தும் பாடோ?!
சென்னை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தமிழகம் வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
வழக்கத்தை விட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிக கூடுதலாகவே பெய்து வருகிறது. இதனால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வலத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை அளித்து வருகின்றனர்.
வெள்ள பாதிப்பு...
அந்தவகையில், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று, நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
நேரில் சந்தித்த ராகுல்...
சென்னையில் ஏற்பட்ட இந்த மழை வெள்ள சேதத்தை பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல் நேரில் பார்வையிட்டு மக்களிடம் பாராட்டுகளைப் பெற்றார்.
வெறும் காலோடு தண்ணீரில்...
சென்னை முடிச்சூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை தண்ணீரில் நடந்து சென்றே ராகுல் சந்தித்தார். அப்போது ராகுல் காலில் செருப்புக் கூட அணியவில்லை.
ராகுல் மட்டும் தான்...
நிவாரணப் பொருட்கள் வழங்கிய போது காலில் ஷூ அணிந்திருந்த ராகுல், ஏனோ வெள்ள நீரில் நடந்தபோது வெறுங்காலோடே நடந்தார். அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் உட்பட அனைவரும் காலில் செருப்பு, ஷூ அணிந்திருக்க, ராகுல் மட்டும் ஏனோ வெறுங்காலுடனேயே நடந்தார்.
பீதி...
டெல்லியில் பிறந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்த ராகுல், பாதிக்கப்பட்ட மக்களின் துயரை நேரில் உணர்ந்து பார்க்கவே இவ்வாறு நடந்ததாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ராகுலின் இந்த நடவடிக்கை தமிழக கட்சித் தலைவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் மற்றவர்களும்...
ஏற்கனவே சில கட்சித் தலைவர்கள் களத்தில் இறங்கி நேரடியாக மீட்புப் பணியில் ஈடுபட்ட போதும், ராகுலின் இந்த செயலைப் பார்த்து விரைவில் பெரிய தலைவர்களும் வெள்ள நீரில் கால் நனைப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஓட்டுக்காக...
இது ஒருபுறம் இருக்க, ‘எல்லாம் இந்த ஓட்டு செய்யுற வேலைப்பா..' என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பாதம் நனையும் அளவே உள்ள தண்ணீரில், பேண்டை மடித்துக் கொண்டு செருப்பு போடாமல் ராகுல் நடப்பது வரும் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தான் என்கிறார்கள் விமர்சகர்கள்.
எது எப்படியோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரி....