விவசாயிகளின் சக்தி என்ன என்பதை மோடிக்கு உணர வைப்போம்..காவிரி பிரச்னையை தீர்ப்பதாகவும் ராகுல் பேட்டி
திருச்சி : விவசாயிகளை சந்தித்த பின்னர் பேட்டியளித்த ராகுல் காந்தி விவசாயிகளின் சக்தி என்ன என்பதை பிரதமர் மோடிக்கு உணர வைப்போம் என்றும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி பிரச்சினையை தீர்ப்போம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஜி கார்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, விமான நிலையம் அருகே உள்ள ஜே.கே. நகர் லூர்து நகரில் உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் பண்ணை வீட்டில் விவசாய சங்க பிரதிநிதிகளை மாலை 6.30 மணிக்கு ராகுல்காந்தி சந்தித்தார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம், வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கம், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், மஞ்சள் விவசாயிகள் சங்கம், சிறு,குறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய உழவர் கட்சி, முல்லைப் பெரியார் பாசன விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளை ஒவ்வொருவராக சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை ராகுல் கேட்டறிந்தார்.
பின்னர் சாரியாக இரவு 7 மணிக்கு பண்ணை இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
இந்தியா முழுவதும் நான் தனியாக சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு வருகிறேன். அதேபோல், இன்று தமிழகத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்க வந்துள்ளேன்.
தமிழக விவசாயிகள் அவர்களின் குறைகளான காவிரி நீர் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட கோரிக்கை, தென்னிந்திய நதிகளை இணைத்தல், தேசிய வங்கிகளில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் முன் வைத்து மனுக்களை கொடுத்துள்ளனர்.
மோடி அரசு இந்திய விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து தொழில் துறைக்கு தாரை வார்ப்பதை காங்கிரஸ் அரசு தடுத்துள்ளது. மோடி அரசு இந்திய விவசாயிகளின் சக்தியை உணரவில்லை. விவசாயிகளின் சக்தி என்ன என்பதை மோடி அரசுக்கு உணர வைப்போம்.
ஏழை மக்களின் சக்தியை மோடி அரசு இன்றளவும் உணர்ந்ததாக தெரியவில்லை. காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னையை பரிசீலனை செய்து தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டோம். தொடர்ந்து எதிர்த்து கொண்டே இருப்போம்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ராகுல்காந்தி, விமான நிலையத்திற்கு சென்று சாரியாக 7.20 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார்.