தமிழ்நாட்டை நேசிக்கிறேன்... தமிழை புரிந்து கொள்ள தமிழ் சினிமா பார்க்கிறேன்- ராகுல்காந்தி
தமிழ் சினிமாவைப் பார்த்து தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் தெரிந்து கொள்ளப் போகிறாராம் ராகுல்காந்தி.
சென்னை: பாஜகவிற்கு பதிலடி கொடுக்க பகவத்கீதை வாசிப்பதாக கூறியுள்ள ராகுல்காந்தி, தமிழ் கலாச்சாரம், மொழியை புரிந்து கொள்ள தமிழ் சினிமா பார்த்து வருகிறாராம்.
தமிழ்நாட்டுக்கும் தனக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது என்பதை நான் இங்கு வரும் போதெல்லாம் உணர்கிறேன் என்று கூறும் ராகுல் காந்தி, தமிழ்நாட்டை மிகவும் நேசிப்பதாக கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை வந்த ராகுல் காந்தி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று டீ சாப்பிட்டார்.
ஸ்டாலின், கருணாநிதி வீடு
ஸ்டாலின் பேரன் பேத்திகள், குடும்பத்தினருடன் உற்சாகமாக பேசினார் ராகுல்காந்தி. கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியை நேரில் சந்தித்து சில நிமிடங்கள் அவரது கையை பிடித்து பேசிக்கொண்டிருந்தார்.
சத்தியமூர்த்தி பவன்
தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்றார். அங்கே, கட்சியின் கொடியை ஏற்றிவைத்த அவர் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
தமிழ் மக்களை நேசிக்கிறேன்
செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, தமிழ்நாடு பற்றியும், கலாச்சாரம் மொழி பற்றியும் அதிகம் பேசினார்.
நான் இங்கே ஹோட்டலில் தங்கியிருந்த போது என் சகோதரி பிரியங்காவிற்கு தமிழ் மக்களை நேசிக்கிறேன் என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன். நானும் நேசிக்கிறேன் என்று பதில் வந்தது.
நெருக்கமான உறவு
தமிழ்நாட்டிற்கும் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நெருக்கமான ஒரு பந்தம் உள்ளது. ஒவ்வொரு முறையும் இங்கு வரும் போது நான் அதை உணர்ந்திருக்கிறேன்.
தமிழ் சினிமா
தமிழ்நாட்டு மக்கள் மரியாதை, பண்பாடு தெரிந்தவர்கள். தமிழ் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளவும், பண்பாடு பற்றி தெரிந்து கொள்ளவும், தமிழ் சினிமா பார்க்க முடிவு எடுத்துள்ளேன்.
தமிழ் மொழி
தமிழ் மொழி தனித்துவம் மிக்கது. பிற மொழிகளைப் போல இல்லை தமிழ் மொழி. தமிழ் மக்களின் உணவு, கலாச்சாரம் தனித்துவம் கொண்டது. ஆனால் பாஜக ஒற்றை கருத்தை அனைத்து மக்களின் மீதும் திணிக்க நினைக்கிறது.
ஆர்எஸ்எஸ் அலுவலகம்
இந்தியாவில் பல்வேறு கலாச்சார மக்கள் வாழ்கின்றனர். ஆனால் பாஜகவிற்கு தெரிந்தது எல்லாம் நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம்தான். அங்கே எடுக்கும் முடிவின் படியே நாடு முழுவதும் கருத்துக்களை திணிக்கிறது பாஜக.
பகவத் கீதை
பாஜக அரசு இந்தியாவின் பன்முகத்தன்மையை புரிந்துகொள்ளவில்லை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் வாதிட்டு தக்க பதிலடி கொடுக்க பகவத் கீதையும் உபநிடதங்ஙளும் தற்போது வாசிக்கிறேன். மனிதர்கள் அனைவரும் சமமாக மதித்து நடத்தப்பட வேண்டும் என்று உபநிடதம் கூறியுள்ளது ஆனால் இவர்கள் ஏன் இதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.
மக்களை சந்தியுங்கள்
கோஷ்டி பூசலை செய்தியாளர்களிடம் சொல்லாதீர்கள். ஏழை மக்களை சென்று சந்தித்து மக்களுடன் தொடர்பில் இருங்கள். தமிழக பிரச்சினை பற்றி பேச நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் தமிழக தலைவர் என்னை வந்து சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார் ராகுல்காந்தி.
தமிழகத்தின் மீது கண்
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜக நினைப்பதைப் போலவே காங்கிரஸ் கட்சியும் நினைக்கிறது. இதனால்தான் தமிழ் மொழி, கலாச்சாரம் பற்றி அதிகம் பேசியுள்ளார் ராகுல்காந்தி. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் தலைவர்களுக்கு அட்வைஸ் செய்து உள்ளார் ராகுல்காந்தி.