ரன்வீர்ஷா பண்ணை வீட்டிலும் குவியல் குவியலாக பதுக்கப்பட்டிருந்த சிலைகள்.. சோதனையில் அம்பலம்!
தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கு இதுவரை 50க்கும் மேற்பட்ட கற்சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்குமாட வீதி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரன்வீர்ஷா. தொழில் அதிபரான இவர், சென்னை கிண்டியில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 27ஆம் தேதி காலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் 35 போலீசார் அடங்கிய படையினர் ரன்வீர்ஷா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
[ இறந்த தாயின் உடல் மீது அமர்ந்து வினோத பூஜை நடத்திய அகோரி.. திருச்சியில் பரபரப்பு!! ]
சிலைகள் பறிமுதல்
இதில் ரன்வீர் ஷா வீட்டில் சிலைகள் மற்றும் கல்தூண்கள் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், அங்கிருந்த 12 வெண்கல சிலைகள், 22 கலைநயம்மிக்க கல்தூண்கள் மற்றும் பிள்ளையார், நந்தி உள்பட 55 சிலைகள் என மொத்தம் 89 பழங்கால கலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ரூ.100 கோடி மதிப்பு
இதில் கற்சிலைகள் அதிக எடை கொண்டவை என்பதால் கிரேன் உதவியுடன் அந்த சிலைகள் அனைத்தும் 4 லாரிகளில் ஏற்றப்பட்டு, கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்றும் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பண்ணை வீட்டில் சோதனை
இதைத்தொடர்ந்து திருவையாறில் அவருக்கு சொந்தமான அரண்மனையிலும் சோதனை நடந்தது. இந்நிலையில் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இங்கும் சிலைகள் பறிமுதல்
செங்கல்பட்டு அருகே, மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள மொகல்வாடி கிராமத்தில் ரன்விர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில், 50க்கும் மேற்பட்ட பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.