செட்டிநாடு குழும நிறுவனங்களில் தொடரும் ரெய்டு… முக்கிய ஆவணங்கள் சிக்கியது
சென்னை: செட்டிநாடு குழும நிறுவனங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செட்டிநாடு குழும நிறுவனங்களான செட்டிநாடு சிமென்ட், மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிலையம், செட்டிநாடு சிலிகா நிறுவனம், லாரி மற்றும் கப்பல் நிறுவனங்கள், நிலக்கரி நிறுவனம், கட்டுமானம் மற்றும் ஜவுளி நிறுவனங்கள், ஸ்டீல் நிறுவனம், பள்ளிகள், கல்லூரிகள், அரண்மனைகள், வீடுகள் உட்பட செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் கோட்டூர்புரம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரண்மனை போன்ற வீடுகள், எழும்பூரில் உள்ள ராணி சீதை ஹால் மற்றும் அங்குள்ள அலுவலகங்கள், அண்ணா சாலையில் உள்ள செட்டிநாடு குழுமங்களின் தலைமை அலுவலகம், எண்ணூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளாக செட்டிநாடு குழும நிறுவனங்கள் சரியான முறையில் வருமான வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதை மையமாக வைத்தே சோதனை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செட்டிநாடு சிமெண்ட்
திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி, கரூர் மாவட்டம் புலியூர் மற்றும் அரியலூரில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டன.
ஆந்திராவில் சோதனை
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள செட்டிநாடு நிறுவனத்துக்கு சொந்தமான அஞ்சலி சிமெண்ட் நிறுவனம், கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் உள்ள சிமெண்ட் நிறுவனம் மற்றும் மும்பையில் செட்டிநாடு நிறுவனம் செயல்படும் 2 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
450 அதிகாரிகள்
தமிழகத்தில் 35 இடங்களிலும், வெளி மாநிலங்களில் 5க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 450 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து இடங்களிலும் நேற்று ஒரே நேரத்தில் சரியாக காலை 9.30 மணிக்கு சோதனை தொடங்கியது. நேற்றிரவு வரை சோதனை நீடித்தது
முக்கிய ஆவணங்கள்
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது நாளை காலை வரை ஆய்வு தொடரும் என கூறியுள்ள அதிகாரிகள், சோதனையில் பல இடங்களில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே வரி முறைகேடு நடந்திருக்கிறதா என்பது தெரியவரும். அதன் பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரண்மனையில் பிரச்சினை
முன்னதாக, செட்டிநாடு குழும நிறுவனங்களின் கவுரவ தலைவர் எம்.ஏ.எம். ராமசாமிக்கும், அவரது வளர்ப்பு மகன் முத்தையா என்ற ஐயப்பனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். தற்போது செட்டிநாடு குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஐயப்பனுக்கும், எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் இடையே சொத்துகளை கைப்பற்றுவதில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
தத்துப்பிள்ளையால் சிக்கல்
தொடர் பிரச்சினைகளையடுத்து, ஐயப்பனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்ததை சட்டப்படி ரத்து செய்வதாகவும் எம்.ஏ.எம்.ராமசாமி அறிவித்தார். தனக்கும் தனது வளர்ப்பு மகனுக்கும் தமக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் இந்நிலையில், செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.