தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்!
சென்னை: தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய ரயில்வே திட்டங்களை ரயில்வே பட்ஜெட்டில் தாக்கல் செய்து, அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தில் ரயில்வே துறைக்கு தேவையான திட்டங்கள் குறித்து தமிழக அரசு ஆலோசித்தது. அதன்படி தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தங்களுக்கு பரிந்தரை செய்கிறோம்.
இதை தாங்கள் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பீர்கள் எனவும் நம்புகிறோம். இதன்படி, சென்னை - கன்னியாகுமரி இடையேயான இரட்டை வழிப்பாதையை நிறைவு செய்ய வேண்டும்.
சென்னை - கன்னியாகுமரி இடையே இரட்டை வழிப் பாதையை நிறைவு செய்தல், ஸ்ரீபெரும்புதூர் - கிண்டி இடையே சரக்கு ரயில் போக்குவரத்து, சென்னை - தூத்துக்குடி இடையே சரக்கு ரயில் போக்குவரத்து, சென்னை - மதுரை - கன்னியாகுமரி இடையே அதிவேக பயணிகள் ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களை வரும் ரயில்வே பட்ஜெட்டில் தாக்கல் செய்து, அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்து, விரைவில் பணிகள் நிறைவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.