காவிரியில் அணை கட்ட எதிர்ப்பு: ஸ்தம்பித்த டெல்டா மாவட்டங்கள்..
தஞ்சை/நாகை: காவிரியில் புதிய அணைகள் கட்டும் கர்நாடகாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ரயில், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள்,அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் என்ற இடங்களில் 3 புதிய அணைகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மேற்கண்ட அணைகளிலேயே தடுக்கப்பட்டு விடும் என்பது தமிழக விவசாயிகளின் அச்சம்.
இதனைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரியில் புதிய அணைகள் கட்டும் கர்நாடகாவைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி ரயில் மறியல்
மன்னார்குடி அருகே நீடாமங்கலத்தில் எர்ணாகுளத்தில் இருந்து நாகூர் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் சாலை மறியல்
திருவாரூரில் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தஞ்சையில் கைது
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயிலை மறிக்க முயற்சி செய்த ஆயிரக்கணக்கான அரசியல் கட்சியினரும், விவசாயிகள் அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
நாகை ரயில் மறியல்
நாகையில் காரைக்கால்-வேளாங்கண்ணி ரயிலை மறிக்க முயன்ற திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
காரைக்காலில் போராட்டம்
கர்நாடக அரசைக் கண்டித்து காரைக்காலில் விவசாயிகள் அனைத்துக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குளித்தலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.