முழு அடைப்பு... தமிழகம் முழுவதும் ரயில் மறியல்.. பல ஆயிரம் பேர் கைது #CauveryProtests #TamilNaduBand
சென்னை: தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது. எங்குமே கலாட்டா நடந்ததாக தகவல் இல்லை. ரயில் மறியல் போராட்டங்களும் நடந்துள்ளன. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ரயில் மறியல் செய்து கைதாகியுள்ளனர்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கைக் கண்டித்து விவசாயிகள், வர்த்தகர்கள் அழைப்பு விடுத்த, அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்த முழு அடைப்புப் போராட்டம் இன்று தமிழகத்தில் காலையில் தொடங்கியது.
இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து கடையடைப்பு கிட்டத்தட்ட முழு அளவில் உள்ளது. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மட்டும்தான் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேபோல அதிமுகவும் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
தமிழகம் முழுவதும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டையில் திருமயம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி தலைமையில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரரயிலை மறித்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கையில் ராமேஸ்வரம் செல்லக் கூடிய ரயிலை தடுத்து நிறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர
மயிலாதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கிழக்கு மா.செ. செந்தில்குமார், மே.மா.செ. சக்கரபாணி, நத்தம் தொகுதி எம்எல்ஏ ஆண்டி அம்பலம் உள்பட 500க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு - எர்ணாகுளம் இடையிலான ரயிலை ஓசூரில் மறித்து விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்தி கைதானார்கள். பொதுவாக ரயில் மறியல் போராட்டம் அமைதியான முறையில் நடந்தது. எங்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்ன்றன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவினர் முன்னாள் அமைச்சர் வேலு எம்எல்ஏ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதிமுகவின் திருவள்ளுர் மாவட்ட செயலாளர் செங்கூட்டுவன் தலைமையில் அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.
மதுரை
மதுரையில் திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, வேலுசாமி, மூர்த்தி, மணிமாறன் உள்பட திமுகவினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திரண்டிருந்த திமுகவினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் நிலையத்தில் உள்ள விளம்பர பலகை ஒன்றை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
பல்லாவரம்
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் ரயில் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுகவினரைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.