கர்நாடகத்தைக் கண்டித்து திமுக ரயில் மறியல் - ஸ்டாலின் உள்பட 5000 பேர் கைதாகி விடுதலை #TamilNaduBandh
சென்னை: கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மு.க. ஸ்டாலினுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் பல லட்சம் கடைகள் அடைக்கப்பட்டது. ஆம்னி பஸ், லாரி, வேன்கள் ஓடாது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழகம் முழுவதும் 1.18 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு மற்றும் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். கையில் கர்நாடக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பேரணியாக சென்று மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்தனர்.
சைதாப்பேட்டையில் திமுக எம்.எல்.ஏக்கள் மா.சுப்ரமணியன், வாகை.சந்திரசேகர் தலைமையில் திமுகவினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.