பவானியில் அணை கட்ட எதிர்ப்பு- கோவை, திருப்பூர், ஈரோட்டில் ரயில் மறியல் - நூற்றுக்கணக்கானோர் கைது!
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடதுசாரி கட்சியினர் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.
திருப்பூர்/கோவை/ஈரோடு: கொங்கு மண்டலத்தின் குடிநீர் ஆதாரமான பவானி ஆற்றில் 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மேல்பவானியில் உற்பத்தியாகும் பவானி ஆறானது, கேரள எல்லையில் 24 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த பகுதிகளில் 6 இடங்களில் 4 கி.மீ. தூரத்தில் தடுப்பணைகளை கட்ட கேரள அரசு திட்டமிட்டது.
இதன்படி தேக்கோட்டை பகுதியில் ஏற்கனவே தடுப்பணை 150 அடியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் மஞ்சக்கட்டி பகுதிகளில் தடுப்பணையை அந்த மாநில அரசு கட்டி வருகிறது.
பாதிப்பு என்ன?
பவானி ஆற்றை நம்பி திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் ஆதாரம் உள்ளது. பவானி சாகர் அணை மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
ஒரு மாதமாக போராட்டம்
கேரள அரசு தடுப்பணைக் கட்டினால் தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு கடும் பஞ்சம் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கோவை- கேரள எல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மற்றும் திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசைக் கண்டித்து...
இந்த போராட்டத்தின் போது கேரள அரசின் சட்டவிரோதச் செயலைக் கண்டிக்காமல் பாராமுகமாக இருக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை அமைக்காததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
21 இயக்கங்கள்
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். கோவையில் திமுக, விவசாயிகள் சங்கத்தினர், த.மா.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 21 இயக்கங்கள் போராட்டம் நடத்தின.