தென் மாவட்ட மக்களை ஏமாற்றிய ரயில்வே பட்ஜெட்
நெல்லை: இந்திய ரயில்வேயில் வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் ஓன்று செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை ஆகும். இந்த பாதையில் செங்கோட்டை முதல் புனலூர் வரை அகல ரயில் பாதையாக மாற்றிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து கடந்த 19-10-2010ல் ரயில் போக்குவரத்தை நிறுத்தியது.
அன்றைய தினம் இருமாநில எல்லைகளில் இந்த ரயிலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திய பல்லாயிரக்கணக்கானோர் துயரத்துடன் இந்த ரயிலில் கடைசி பயணம் செய்து பிரியாவிடை கொடுத்தனர்.
51 கி.மீ நீளமுள்ள இந்த தடத்தில் 2013ம் ஆண்டுக்குள் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு முடிக்கப்பட்டு விடும் என்றும் ஒப்பந்த பணிகள் முடிந்து வேலைகள் தொடங்கியதாகவும் தெரிவித்தது ரயில்வே.
ஆனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 60 மாதங்கள் கடந்ததுதான் மிச்சம் 50சதவிகிதப் பணிகள் மட்டுமே தொடங்கி முடிக்கப்பட்டுள்ளன. 110 ஆண்டுகால வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையில் புனலூர்-கொல்லம் இடையே பணிகள் முடிக்கப்பட்டு அகல ரயில் பாதையில் கடந்த 7ஆண்டுகாலமாக ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மிகவும் சவாலான பாதையாக இருக்கும் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணி விரைந்து முடிக்கப்பட்டால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
கேரளாவில் இருந்து வடக்கு நோக்கியும், தென் கிழக்கு நோக்கியும் செல்லும் ரயில்கள் தற்போது கூடுதல் தொலைவை சுற்றிச் செல்கின்றன. இதனால் ரயில்வேக்கு கூடுதல் செலவு பிடிக்கிறது. இந்த ரயில்பாதை அமைக்கப்பட்டால், இந்த செலவு மிச்சமாகும்.
அதுமட்டுமின்றி, சென்னை, பெங்களுரு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கேரள மாநிலம் திருவனந்த புரம், கொல்லம், குருவாயூர், எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கும் இந்த வழித்தடம் நேரத்தை மிச்சப்படுத்த உதவியாக இருக்கும்.
செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மக்களுக்கும் இந்த திட்டத்தால் பலன் கிடைக்கும். இதனால் இருமாநில எல்லையோர மக்களுக்கும் வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் குறைவான அளவே மக்களவை உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் மாநில ரயில்வே திட்டங்களை போராடி பெறுவதில் வெற்றி பெறுகிறார்கள். கேரள மாநில மக்களவை உறுப்பினர்களின் நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த சிலதினங்களாக தென்னக ரயில்வேயின் தலைமை கட்டுமானபிரிவு பொறியாளர் மிஸ்ரா தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை திட்ட பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.
கொல்லம் முதல் சிவகாசி வரையுள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தென்னக ரயில்வே பணிகளை துரிதப்படுத்த நம் எம்.பிக்கள் குரல் எழுப்புவார்களா..? இன்றைய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இந்த தடத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா..? என்ற எதிர்ப்பார்ப்புக்களை ஏற்ப்படுத்திய ரயில்வே பட்ஜெட் தென்மாவட்ட மக்களை ஏமாற்றியுள்ளது, என்றே ரயில் பயணிகள் கூறுகின்றனர்.