தனியார்மயமாக்கலை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு
செங்கோட்டை: தனியார் மயமாக்கலை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள்.
தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் டாக்டர் பிபேக் தேப்ராய் கமிட்டியின் பரிந்துரைப்படி மத்திய அரசின் தனியார் மய முயற்சிகளை கண்டித்தும், ரயில்வே மருத்துவமனைகள், ரயில்வே பள்ளிகள் தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்தும், ரயில் பயணிகள் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் வரலாறு காணாத வகையில் உயர்த்தி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதை எதிர்த்தும், 2.5 லட்சம் காலியிடங்களையும், அடுத்து ஏற்படப் போகும் 2 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் சரண்டர் செய்ய வேண்டும் என்ற முடிவை எதிர்த்தும் வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒரு வார காலம் முதல்கட்டமாக கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்த உள்ளனர்.
இது குறித்து தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் அனைத்து பகுதிகளிலும் ரயில்வே ஊழியர்களிடம் போராட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று செங்கோட்டையில் மஸ்தூர் யூனியன் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரை கோட்டத் தலைவர் இராமசுப்பு, கோட்ட செயலாளர் ரபீக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் கோட்ட செயலாளர் ரபீக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசை கண்டித்தும், ரயில்வே போர்டையும் கண்டித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். வரும் செப்டம்பர் 2ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை பிற மத்திய அரசு ஊழியர்கள் நடத்த உள்ளனர். அதற்கு நாங்களும் பெரிய அளவில் ஆதரவு தர உள்ளோம்.
இதற்கொல்லாம் செவி சாய்க்கவில்லை என்றால் வரும் நவம்பர் 23ம் தேதி தென்னகத்தில் பெரிய வேலைநிறுத்த போராட்டம் நடத்துகிறோம். அதற்கு எங்களை தயார் படுத்திட இந்த கூட்டங்களை நடத்தி வருகிறோம். ரயில்வேத் துறையில் மானியங்களுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு பொது பட்ஜெட்டில் கொடுத்தால் ரயில்வேத் துறை லாபத்தில் இயங்கும் என்றார்.