சென்னை மின்சார ரயில் விபத்தில் 3 பேர் பலி.. ரயில்வே ஐ.ஜி. விசாரணை! கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?
சென்னை பரங்கிமலை- பழவந்தாங்கல் இடையே செல்லும் மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 3 பேர் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக ரயில்வே துறை இயக்குநர் (ஐ.ஜி.) ராமசுப்பிரமணியம் நேரில் சென்று விசாரணை
சென்னை: தாம்பரம் - கடற்கரை மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்களில் காலை நேரங்களில் கூட நெரிசல் காணப்படும். இந்நிலையில் இன்று காலையில் மின்சார ரயிலில் பரங்கிமலையில் ஏறிய இளைஞர்கள் சிலர் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
அப்போது பழவந்தாங்கலை ரயில் நெருங்கும் போது சிலர் தவறி விழுந்து படுகாயமடைந்தனர். இதில் 2 பேர் உடல் துண்டாகி உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த 4 இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு குரோம்பேட்டை மருத்துமனையிலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த ரயில்வே ஐ.ஜி. ராமசுப்பிரமணியம் நேரில் சென்ற விசாரணை நடத்தினார்.
ரயில் பயணம் ஏன்?
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னையில உள்ள பல்வேறு பகுதிகளில் பணி நிமித்தமாக நீண்ட தூரம் செல்லும் பெண்கள், இளைஞர்கள் பெரிதும் விரும்புவது ரயில் பயணங்களையே.
வாடகை உயர்வு
ஏனெனில் நீண்ட தூரம் என்பதால் அலுப்பு இல்லாமல் பயணம் செய்ய ரயில்களே வசதியாக இருப்பதாக கருதுகின்றனர். மேலும் சென்னை நகரில் வாடகை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சாமானிய மக்கள், கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆகியோர் புறநகரங்களில் குடிபெயர்கின்றனர். இதனால் பேருந்து நிலையத்துக்கு அருகே வீடு பார்க்கும் காலம் போய் ரயில் நிலையங்களுக்கு அருகே குடிபெயர்ந்து சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.
குறைந்த கட்டணம்
சென்னை புறநகர் பகுதிகள் மட்டுமல்லாது அரக்கோணம், வாணியம்பாடி, வேலூர், திருவள்ளூர், பொன்னரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ரயில்களில் பயணம் செய்தபடி தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும் பஸ் கட்டணங்களைக் காட்டிலும் ரயில்களில் மிக மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
படிக்கட்டு பயணம்
இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பயணிகள் நெரிசலில் சிக்கி தவறி விழுந்து பலர் தங்கள் உயிர்களையும், உடல் உறுப்புகளையும் இழந்துள்ளனர். படிக்கட்டு பயணம் பேருந்தில் மட்டும் ஆபத்து இல்லை, ரயில்களிலும்தான் என்பதை இளைஞர்கள் உணர்வது எப்போது?
தீர்வு என்ன?
இதுபோன்று ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குவதைத் தவிர்க்க காலை, மாலை நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படலாம். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.