சென்னையில் பெண்ணை காப்பாற்றிய சிவாஜிக்கு தீரர் விருது-ரயில்வே அமைச்சர் ஒப்புதல்
ரயில்வே காவலர் சிவாஜிக்கு தீரர் விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை: ரயில்வே போலீஸ் சிவாஜிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கி, தீரர் விருது வழங்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்குமுன்பு சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி பறக்கும் ரயிலில் சென்ற 19 வயது இளம்பெண் பயணம் செய்தார். அதே பெட்டியில் பயணம் செய்த சத்யராஜ் என்ற இளைஞர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.
அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், கம்பியால் தாக்கினார். இதனால், அந்த பெண் அலறி சத்தம்போடவே, பக்கத்து பெட்டியில் இருந்த ரயில்வே போலீஸ் காவலர் சிவாஜி என்பவர் விரைந்து வந்து சத்யராஜை பிடித்து எழும்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த வந்த ரயில்வே ஐஜி பொன்.மாணிக்கவேல், ரயில்வே காவலர் சிவாஜிக்கு பாராட்டு தெரிவித்து, 5 ஆயிரம் ரூபாய் வெகுமதியும் வழங்கினார்.
இந்நிலையில், தம் உயிரையும் பொருட்படுத்தாமல் தனிநபராக இளம்பெண்ணை காப்பாற்றிய ரயில்வே போலீஸ் சிவாஜிக்கு தீரர் விருது வழங்கப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே, மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்ற மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல், காவலர் சிவாஜிக்கு 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சிவாஜிக்கு தீரர் விருது அளிப்பதற்கும் பியூஷ் கோயல் ஒப்புதல் அளித்துள்ளார்.