கேரளா கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை திருச்சியில் இறக்கி விட்ட அதிகாரிகளால் பரபரப்பு!
Recommended Video
திருச்சி: மாணவர்கள், மக்கள் சேமித்த நிவாரண பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல இலவசம் என்ற போதிலும் திருவாரூரில் உள்ள கேரள மாணவர்கள் கொண்டு சென்ற நிவாரண பொருட்களை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதால் அதிகாரிகளுடன் மாணவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
கேரளத்தில் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் உதவிகள் செய்து வருகின்றனர். பணமாகவோ காசோலையாகவோ மக்கள் உதவி செய்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் மற்ற மாநில அரசுகளும் உதவிகளை செய்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் கேரளத்துக்கு செல்கின்றன. அவ்வாறு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் ரயில் மூலம் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்றால் அதற்கு இலவசம் என்று ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் கேரள மாநிலத்து மாணவர்கள் தாங்கள் சேமித்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 105 பண்டல்களில் சுற்றப்பட்ட நிவாரண பொருட்களை எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு சென்றனர்.
நிவாரண பொருட்களுக்கு டிக்கெட் இல்லாத போதிலும் ரயில்வே அதிகாரிகள் அந்த பொருட்களை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டனர். மேலும் மாணவர்களால் சேகரிக்கப்பட்டதை ரயில்வே துறை சார்பில் சேகரிக்கப்படும் நிவாரண பொருட்களாக மாற்றம் செய்து அதனை கொண்டு சேர்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
நிவாரண பொருட்களை நாங்களே உரிய முறையில் கொண்டு செல்கிறோம் என கேரள மாணவர்கள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ரயில்வே துறை சார்பில் இலவசமாக நிவாரண பொருட்களை கொண்டு செல்ல அனுமதி அளித்தும் ரெயில்வே அதிகாரிகளின் சுயநல போக்கினால் பொருட்களை கொண்டு சேர்க்க முடியாதோ என்று மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.