23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை.. தெற்கு ரயில்வே அசத்தல்
தெற்கு ரயில்வேயில், மேலும், 26 நிலையங்களில், 'வை - பை' வசதி செய்யப்பட உள்ளது.
சென்னை: பயணிகளை கவரும் விதமாக தெற்கு ரயில்வேயில், மேலும் 26 ரயில் நிலையங்களில் "வை-பை" வசதி செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் போக்குவரத்தில், பயணியர் வருகையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதையொட்டி, 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், நாடு முழுவதும், 'கூகுள்' நிறுவன உதவியுடன், ரயில் நிலையங்களில், இணையதள இணைப்புக்காக, இலவச, 'வை - பை' வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், தெற்கு ரயில்வேயில், சென்னை, சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், அரக்கோணம், காட்பாடி, கோவை, மேட்டுப்பாளையம், குன்னுார், ஊட்டி மற்றும் கேரளா, கர்நாடகாவில் ஆறு நிலையங்கள் உட்பட, 23 நிலையங்களில், 'வை - பை' வசதி செய்யப்பட்டுள்ளது.
'லேப் - டாப்' மற்றும் மொபைல் போன்களில் இணையதள தொடர்பினால், இவ்வசதியை 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி, 'இ - மெயில்' பார்க்கலாம், ரயில் போக்குவரத்து பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்.
இவ்வசதிக்கு பயணியர் தரப்பில் பலத்த வரவேற்பு உள்ளதால், தெற்கு ரயில்வேயில் மேலும் 26 நிலையங்களில் 'வை - பை' வசதி செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.