40 கிமீ பயணத்துக்கு ரூ15.. பிளாட்பார டிக்கெட் ரூ20: கட்டண உயர்வால் திருச்சி மக்கள் கொந்தளிப்பு
திருச்சி ரயில் நிலையத்தில் பிளாட்பார டிக்கெட் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திருச்சி: திருச்சி கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் விலையை ரூ.20 ஆக ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
திருச்சிக் கோட்டத்திற்கு உட்பட்ட ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பிளாட்பார டிக்கெட்டின் விலை ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் அப்படியே இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று, வேளாங்கண்ணி, நாகை, திருவாரூர், கும்பகோணம், தஞ்சை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆகஸ்டு 15ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை பிளாட்பார டிக்கெட் விலை ரூ.20 ஆக வசூலிக்கப்பட உள்ளது.
ரயில் நிலையங்களில் வீண் பொழுதை கழிப்பவர்கள், பயணிகளுக்கு இடையூறாக இருப்பவர்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறினாலும், இது போன்றவர்களை சோதனை செய்து தடுப்பது நிர்வாகத்தில் வேலை என்றும் அதனை விடுத்து பயணிகளை வழியனுப்ப வரும் உறவினர்களின் பாக்கெட்டுகளில் கை வைக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், திருச்சி முதல் கரூர் வரையிலும், திருச்சி முதல் தஞ்சாவூர் வரையிலுமான 40 கிமீ தூர ரயில் பயணத்திற்கு டிக்கெட் கட்டணம் 15 ரூபாய்தான். ஆனால் தங்களை அனுப்பி வைக்க வரும் உறவினர்கள் பிளாட்பார டிக்கெட் கட்டணமாக ரூ.20 கொடுக்க வேண்டும் என்பது மிகவும் அநியாயமானது என்று பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.