பஸ் ஸ்டிரைக் எதிரொலி...ரயில்வே வருவாய் செம அதிகரிப்பு
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து ஊழியர்கள் 3 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப்போராட்டத்தால் தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நெல்லை: ரயில்வேயில் கடந்த இரண்டு நாட்களாக நாள் ஒன்றுக்கு 1 லட்சத்திற்கு மேல் வருவாய் அதிகரித்துள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.
அரசுப் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ்சை எதிர்பார்த்து காத்து கிடக்காமல் பலர் ரயில் பயணத்திற்கு மாறினர்.
முக்கிய நகரங்களுக்கரு ரயிலில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால் பலர் ரயில் நிலையத்தை நோக்கி படையெடுத்தனர். நெல்லையிலிருந்து திருச்செந்தூர், செங்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் 3வது நாளாக கூட்டம் அலை மோதியது. வெளியூர்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி புரிவோர் ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுத்துச் சென்றனர்.
தெற்கு ரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்துக்கு குறைவில்லை. சென்னையிலிருந்து இரவு நெல்லைக்கு வந்த ரயிலில் ஏராளமானோர் வந்து இறங்கினர். அது போல் சென்னைக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
கோவை, பழநி ரயில்களிலும் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். நெல்லை சந்திப்பு முன்பதிவு மையத்தில் ஒரு நாள் வருவாயாக ரூ.5 லட்சம் வரை கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ரயில்வே அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.