ஜோலார்பேட்டை தண்டவாளத்தில் விரிசல் – ரயில்கள் தாமதத்தால் பயணிகள் கடும் குளிரில் அவதி!
அரக்கோணம்: ஜோலார்பேட்டை அருகே நள்ளிரவில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு தண்டவாளத்தை சரிபார்க்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரவு 12.30 மணியளவில் காக்கங்கரை, மொளகரம்பட்டி இடையே சென்னை செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டு உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், மங்களூர் மெயில், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.
திருப்பத்தூர் மற்றும் அருகே உள்ள ரயில் நிலையங்களை சேர்ந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்தனர். இதையடுத்து நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் 1.30 மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக ஒவ்வொன்றாக இயக்கப்பட்டது.
நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள், மற்றும் காட்பாடி, ஜோலார்பேட்டை அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் வருகைக்காக காத்திருந்த பயணிகளும் கடும் குளிரில் அவதிப்பட்டனர்.