ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல்... சென்னைக்கு வரும் ரயில்கள் நிறுத்தம்!
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது .
வேலூர் : ஜோலார்பேட்டை அருகே தண்டவாள விரிசல் ஏற்பட்டதால் சென்னைக்கு வரும் 5 ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் சரக்கு ரயில் ஒன்று அந்த பாதையில் சென்ற போது சிக்னல் வந்ததையடுத்து ரயிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓட்டுநர் தண்டவாளத்தை பார்த்த போது அதில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சரக்கு ரயில் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் 20 ஊழியர்கள் விரிசலை சரிசெய்யும் பணியில் அதிகாலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். விரிசல் தற்காலிகமாக சரிசெய்யப்பட்ட நிலையில் ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக 5 கிமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
13 மீட்டர் அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதால் இதனை முழுவதுமாக சரிசெய்தால் மட்டுமே ரயில்கள் வேகமாக செல்ல முடியும். ரயில் தண்டவாள விரிசல் முழுவதும் சரி செய்யப்படாத நிலையில் ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு செல்ல வேண்டிய 5 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. யஷ்வந்த் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஏலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 5 ரயில்கள் பாதி வழியிலேயே நிற்பதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.