ஆரியங்காவு குகையில் மீண்டும் மண் சரிவு: ரயில்வே பணிகள் நிறுத்தம்
நெல்லை: ஆரியங்காவு குகையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் ரயில் பாதை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
செங்கோட்டை புனலூர் இடையே உள்ள 51 கிலோ மீட்டர் தொலைவு மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக அமைக்கும் பணி கடந்த 48 மாதங்களாக நடைப்பெற்று வருகிறது. இப்பணியை 3 ஒப்பந்தக்காரர்கள் செய்து வருகின்றனர். இத்தடத்தில் 5 மலைக்குகைகள் உள்ளன. புளியரை ஆரியங்காவு பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள முதல் மலைக்குகை உள்ளது.
இந்த குகையில் 200 மீட்டர் தூரம் வரை இரும்பு கம்பிகளால் வளைவை உருவாக்கி சிமெண்ட் சிலாப்புக்கள் வைத்து ஆர்ச் கட்டப்பபட்டு வருகிறது. இப்பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். நேற்று மாலையில் குகையில் பணி நடந்துக் கொண்டிருந்த போது தீடிரென மண்சரிவு ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு குகைப் பகுதியை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.
அதன் பின் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மண் சரிந்து விழுந்து அதை அகற்றி முடித்து அடுத்தக்கட்ட பணிகளுக்கு செல்லும் போது மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பணிகள் எதுவும் தொடர வேண்டாம் என்றும் அதிகாரிகள் தரப்பு சொல்லியுள்ளதால் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,
இத்தடத்தில் உள்ள பாறைகள் அனைத்தும் சுக்கான் வகைப் பாறைகள் கடினத்தன்மை கிடையாது. சரல் வகையை சார்ந்தது. அதனால் தான் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது என்றனர். இந்த தடத்தில் நாளை தென்னக ரயில்வே அதிகாரிகள் குழு நேரில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.