போலீஸ் தடியடியால் கேள்விக்குறியான டிடிஆரின் எதிர்காலம்.. நீச்சல் வாழ்க்கையும் முடிந்ததாக கண்ணீர்
சென்னை மெரினா பகுதியில் தடியடி நடத்திய காவல்துறையினர் பணி முடித்து திரும்பிய ரயில்வே டிடிஆரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சென்னை: மெரினாவில் கடந்த 23ஆம் தேதி போலீசார் வீடுபுகுந்து நடத்திய தடியடி தாக்குதலில் ரயில்வே டிடிஆர் ஒருவரின் கை எலும்பு முறிந்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்காத தன்னை போலீசார் கடுமையாக தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக அறவழிப் போராட்டம் நடத்தியவர்களை கடந்த 23 ஆம் தேதி காலை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசினர்.
போலீசாரும் பதிலுக்கு கற்களை வீசினர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் சென்னை நடுக்குப்பம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் ஏராளமான வாகனங்கள் மற்றும் குடிசைகள் தீக்கிரையாயின.
சிக்கிய ரயில்வே டிடிஆர்
காவல்துறை நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் வன்முறையின் போது திருவல்லிக்கேணி பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் அடித்து உதைத்து கைது செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த ரயில்வே டிடிஆர் பிரேம்நாத்தையும் போலீசார் தாக்கியுள்ளனர்.
கை எலும்பு முறிந்தது
அவரும் அவரது பெற்றோரும் எத்தனையோ முறை போராட்டத்தில் பங்கேற்வில்லை, பணிமுடிந்து இப்போதுதான் வீடு திரும்பினேன் என்று கூறியும் அதனை அறவே கேட்காத காவல்துறையினர் அவரை இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கை எலும்பு முறிந்தது.
முறிந்துப்போன நீச்சல் வாழ்க்கை
மூன்று நாட்கள் சிறையில் இருந்த அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். கை எலும்பு முறிந்துள்ளதால் பழையபடி நீச்சல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
என்ன நடவடிக்கை எடுக்குமோ?
மேலும் தன்மீது வன்முறை வழக்குப் பதியப்பட்டதால் ரயில்வே நிர்வாகம் தன் மீது என்ன நடவடிக்கை எடுக்குமோ? தனது எதிர்காலம் என்னவாகுமோ என பீதியடைந்துள்ளார்.
ஜெயலலிதாவிடம் பரிசு வாங்கியவர்
பாதிக்கப்பட்ட ரயில்வே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கையால் பரிசுகளை பெற்றுள்ளார். ஏராளமான பதக்கங்களையும் குவித்து வைத்துள்ளார். காவல்துறை தனது கையை மட்டும் முறிக்கவில்லை. தனது எதிர்காலத்தையும் சிதைத்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.