இதுதான் ஸ்வச் பாரதமா?.. ரயில் கக்கூஸில் தயாராகும் டீ, காபி.. உயிருக்கு உலை வைக்கும் ரயில்வே!
ரயிலில் பயணிகளுக்கு வழங்கும் டீ, காபியில் கழிவறை நீர் கலக்கப்பட்டது
Recommended Video
சென்னை: பயணிகள் ரயில் ஒன்று பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கிறது. அதில் ரயில்வே கேன்டீன் ஊழியர்கள் இங்குமங்கும் நடமாடி கொண்டிருக்கிறார்கள். நீல நிற சட்டை அணிந்த ரயில்வே கேன்டீன் ஊழியர் ஒருவர் ரயிலின் கழிப்பறையின் கதவருகே பரபரப்பாக காத்து கொண்டிருக்கிறார். கழிப்பறைக்குள்ளிருக்கும் நபரிடம் அவ்வப்போது ஏதோ பேசிவிட்டு செல்கிறார். யாராவது தன்னை கவனிக்கிறாரா என சுற்றுமுற்றும் பார்க்கிறார்.
கழிப்பறை திறக்கிறது. அங்கு மற்றொரு ரயில்வே கேன்டீன் ஊழியர், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொடுக்கும் டீ, காபி கேன்களில் கழிவறை நீரை கலந்து, கழிவறை வாயிலில் காத்திருந்தவரிடம் ஒவ்வொன்றாக எடுத்து தருகிறார். அது ஒவ்வொரு கேன்டீன் ஊழியர்களும் முகத்தில் எந்தவித சலனமுமில்லாமல் அவற்றினை பெற்று செல்கிறார்கள். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மனித உயிர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துகிடக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். நாடே குட்டிச்சுவராக போய்க் கொண்டிருப்பதற்கு இதுவே மிகச்சிறந்த சான்று. இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் ரயில்வே துறை. நாடு முழுவதும் ரயில்கள் மூலம் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
பேருந்து கட்டணங்களை உயர்த்தி மாநில அரசு பாடாய் படுத்துகிறதே என்று ரயிலில் ஏறினால் அங்கு உயிருக்கே உலை வைக்கப்படுகிறது. தட்கல், பிரீமியம் தட்கல், சிறப்பு ரயில் கட்டணம் என விதவித வடிவங்களில் கட்டண அச்சுறுத்தல்களிடையே பயணித்தாலும் மனித சுகாதாரம் ஆயிரம் கேள்விக்குறியாய் நம்கண்முன் வந்து விரிந்து நிற்கிறது.
எப்படி நம்பி பயணிப்பது
ரயிலில் பயணம் செய்வோரில் வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என பல பேர் பயணம் செய்வர். இவர்கள் உட்பட பயண களைப்பிற்காக பயணிகள் நம்பி வாங்கி குடிக்கும் டீ, காபியில் இப்படியா கழிப்பறை குழாயில் வரும் நீரை சேர்த்து தருவது? டீ, காபி ரயில்வே கழிப்பறையிலா தயாராவது? ரயில்வே மத்திய அமைச்சரிலிருந்து அங்கு பணியாற்றும் கடைநிலை ஊழியர் வரை மனசாட்சியோடு பதில் சொல்லட்டும், ரயிலில் வாங்கப்படும் பணத்திற்கு ஏற்றார்போல்தான் தரத்தோடும்,அளவோடும், சுவையோடும் உணவு வழங்கப்படுகிறதா என்று.
புல்லட் ரயில் அவசியமா?
ரயில்வேயின் பெருமளவு துறைரீதியான பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதால்தான் இந்த கதி ஏற்பட்டு நிற்கிறது. கிலியை கொடுத்துவரும் ரயில் விபத்துகளின் உயிரிழப்புகள் இதுவரை குறைந்தபாடில்லை. ரயிலின் கழிவறையில் அடிக்கும் முடைநாற்றத்திற்கும், ரயிலில் குடும்பம் நடத்திவரும் எலிகள், கரப்பான்பூச்சிகளை ஒழித்துக் கட்ட ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், சீனா, ஜப்பானுக்கு இணையாக புல்லட் ரயில் விடுவதற்கு மத்திய அரசு ஆசைபடக்கூடாது. இந்த லட்சணத்தில் ரயிலில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் மற்றும் ரயில்குடிநீருக்கு மத்திய அரசின் 5% ஜிஎஸ்டி வரி வேறு. நம் பணத்தையும் கொடுத்து சொந்த செலவில் சூனியத்தையும் வைத்துக் கொள்ள வேண்டுமா?
லாலுவே பரவாயில்லை
எத்தனையோ முறை சுட்டிக்காட்டியும் ரயில்வே துறை தன்னை திருத்திக்கொள்ளாதது மிகுந்த கண்டனத்துக்குரியது. முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லல்லுபிரசாத் மீது ஆயிரம் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தன்னுடைய துறையில் அதிநவீன வசதிகளை புகுத்தினார், மண்குவளைகளில் டீ, காபி உட்பட உணவின் தரம் உயர்ந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் ரயில்வே துறையை லாபமாக நடத்தியதுடன், தன் பட்ஜெட்களில் லாபக்கணக்கையும் காட்டிய முதல் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உயிர் பாதுகாப்பு அவசியம்
எந்தெந்த வழிகளில் பயணக் கட்டணத்தை யோசிக்கலாம், எந்தெந்த வழிகளில் வரிகளை மக்கள் தலையில் கட்டி வசூலிக்கலாம் என யோசிப்பதை மத்திய அரசு விட்டுவிட்டு, பயணிகளுக்கு சுதாரமான முறையில் உணவு வழங்க ரயில்வே நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். சுத்தமான, சுவையான, நியாயமான விலையில், தரமான, உணவுகளை பொதுமக்களுக்கு வழங்க ஒப்பந்ததாரர்களுக்கு ரெயில்வே துறை வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என்ற கண்டிப்பான உத்தரவினையும் பிறப்பிக்க வேண்டும். மொத்தத்தில் உணவு உட்பட அனைத்து வகையிலும் உயிருக்கு பாதுகாப்பான ரெயில்பயணத்தை ஏற்படுத்தி தர மத்திய அரசு இனியாவது முயல வேண்டும்.