அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுக்குப் போகும் ரயில்வே நல சங்கம்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் ஈரோடு - பழநி ரயில்வே நலச் சங்கம் சார்பில் போட்டியிட உள்ளனர்.
இது குறித்து ஈரோடு - பழநி ரயில்வே விஸ்தரிப்பு மக்கள் பணி சங்க செயலாளர் லிங்கம் சின்னசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவத:
ஈரோடு - பழநி புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை ஆகும்.
இதற்காக பல்வேறு போராடங்கள் நடைபெற்ற நிலையில், ஈரோடு - பழநி இடையே காங்கேயம், தாராபுரம் வழியாக, 91 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை.
எனவே, இந்த பணியை உடனே துவக்க கோரி, பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தோம். இதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை.
எனவே, வரும் பாராளுமன்ற தேர்தலில், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும், எங்களது சங்கத்தின் சார்பில், வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
மேலும், எங்கள் சங்கத்தின் சார்பில், விரைவில் மாநாடு நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு அழைப்பு விடுப்போம். அவரை இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வைப்போம் என்றார்.
தற்போது, திண்டுக்கல் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஈரோடு தொகுதியில் மதிமுக -வும், திருப்பூர் தொகுதியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகக்கது.