பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் 72 மணி நேர வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் 72 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே சங்க ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று முதல் 72 மணி நேர போராட்டம் நடத்த உள்ளனர். இதனால் ரயில்வே சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் தனியாரை அனுமதிக்கக்கூடாது, 7வது ஊதியக் குழுவினை அமல்படுத்த வேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, சில நாட்களுக்கு முன் அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதி அமைச்சகம், மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய ரயில்வே இணை அமைச்சகங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று ரயில்வே ஊழியர்கள் தங்களது 72 மணி நேர போராட்டத்தை துவங்கி உள்ளனர். இந்தப் போராட்டத்தில், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், பாதுகாப்பாளர்கள் சங்கம், ஓட்டுநர் சங்கம் மற்றும் ரயில் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் சங்கம் ஆகிய 4 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ரயில்வே ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவர்கள். எனவே, பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுத்து நிறுத்தும் வகையில் அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.