சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக ரயில்கள் நிலையங்கள் தனியாருக்கு கூண்டோடு விற்பனை- பயணிகள் பகீர்!
சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக ரயில் நிலையங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது பயணிகளை பதற வைத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் உட்பட 25 ரயில் நிலையங்கள் மொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. இதனால் ரயில் கட்டணத்தையும் தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்கும் அபாயம் இருப்பதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நவீனமயமாக்கல் என்ற பெயரில் நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை என 25 ரயில் நிலையங்கள் அப்படியே தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.
அத்தனை வசூலும்...
இதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் பல போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்துள்ளன. இந்த நிறுவனங்கள் விதித்துள்ள நிபந்தனைகளில் ப்ளாட் பார்ம் கட்டணம், பார்க்கிங் கட்டணத்தை தாங்களே வசூலிப்போம் என்பது உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பார்களும் வைப்பார்களாம்...
அத்துடன் ரயில் நிலையங்களில் மதுபான பார்கள் அமைக்கவும் இந்நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன. இந்த கோரிக்கைகள் பலவற்றை ரயில்வே நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
கட்டண நிர்யணம் உரிமை?
இதன் உச்சகட்டமாக ரயில் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை கோரவும் பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் ரயில் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்கிற பீதி பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.
ஷாப்பிங் மால்
இதனிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மிக பிரமாண்டமான ஷாப்பிங் மால் ஒன்றை கட்ட தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் இந்நடவடிக்கையால் பல லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில்வே தொழிற்சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.