தொடர் மழை.. ஈரமான சின்ன வெங்காயம்.. விலை சரிவு.. கவலையில் விவசாயிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் தொடர் மழையால் சின்ன வெங்காயத்தில் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் விலை இல்லாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் போதிய மழை பெய்துள்ளது. கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சின்ன வெங்காயம் நடவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தொடர் மழையால் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்ய முடியவில்லை. அவை தண்ணீரில் கிடப்பதால் அழுகும் நிலையை அடைந்துள்ளன சில விவசாயிகள் வெங்காயத்தை தண்டுடன் அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு சென்று உலர்த்தி வருகின்றனர்.
ஈரம் நன்றாக காய்ந்த பின்னர் தண்டுகளில் இருந்து வெங்காயத்தை பிரித்து எடுக்கின்றனர். இருப்பினு்ம் சந்தையில் வியாபாரிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மதுரை, தூத்துக்குடி, ஓட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்காததால் சினன வெங்காயம் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாய அணி துணை செயலாளர் கூறுகையில், தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் நன்றாக விளைந்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அறுவடை செய்ய முடியவில்லை. ஈரப்பதமாக உள்ள வெங்காயத்திற்கு சந்தையில் போதிய விலை இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட வெங்காய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.