சென்னையில் இன்றும் மழை.. குளு குளு குஷியில் சென்னைவாசிகள்
சென்னையில் இன்றும் குளு குளு மழை பெய்து சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: சென்னையில் காலை முதலே வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாலை நேரத்தில் குளிர் காற்று வீசியது இரவு நேரங்களில் கனமழை கொட்டியது. சென்னையில் பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
தமிழகம் முழுவதும் இன்று நண்பகலுக்கு மேல் பரவலாக மழை பெய்தது.வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
ஆந்திராவின் வடக்கு பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, ஏத்தக்கோவில், ஜம்புலிப்புத்தூர், க.விலக்கு, பிச்சம்பட்டி, வேலப்பர் கோவில் பகுதிகளிலும் மதுரையில் காளவாசல், தேனி ரோடு ஆகிய பகுதிகளிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆரணி, சேவூர், ராட்டினம், வேலூர் ஆகிய இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, நெல்லை மாவட்டம் வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமாரான மழை பெய்தது.