கொட்டும் மழையிலும் குடை பிடித்துக் கொண்டு வாக்களிக்கும் நெல்லை மக்கள்
நெல்லை: நெல்லையில் மழை கொட்டினாலும் மக்கள் குடை பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரை, நெல்லை, நாகை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையால் பல இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது.
மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். நெல்லையில் என்ன தான் மழை கொட்டினாலும் மக்கள் வீடுகளில் முடங்கிவிடாமல் குடை பிடித்துக் கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நிற்பதை காண முடிகிறது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நெல்லையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை பெய்தாலும் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் மழையால் வாக்குப்பதிவு மந்தமாகியுள்ளதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.