இன்னும் 24 மணி நேரத்தில்.. தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
சென்னை: வட தமிழகத்தின் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடலை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார்.
இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 12 செ.மீ மழையும், உத்தரமேரூர், வாணியம்பாடியில் தலா 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை இருக்கும். அடுத்த 2 நாளுக்கு மழை நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டததுடன் காணப்படும். ஓரிரு முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 30 வரையில், பெய்த தென்மேற்கு பருவமழையின் அளவு மழை 206 மி.மீ ஆகும். இயல்பான அளவு 204 மி.மீ ஆகும். இது இயல்பை விட 1 சதவீதம் அதிகம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.