இரவில் கடும் குளிர்.. பகலெல்லாம் வாடைக் காற்று.. என்னாச்சு தமிழகம்.. எங்க போச்சு மழை?
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை பெய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இந்த நிலையில் தற்போது பனி கொட்டத் தொடங்கியிருப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் தற்போது வட கிழக்குப் பருவ மழைக்காலம் என்றாலும் கூட மழை அவ்வளவாக இதுவரை பெய்யவில்லை. கன மழை சுத்தமாக இல்லை. பல பகுதிகளில் இரவில் கடுமையாக குளிருகிறது. பகலில் வாடைக்காற்று வீசுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையையும் அது ஏற்படுத்திய பாதிப்பையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அதற்கு நேர் மாறாக நிலைமை இந்த ஆண்டு உள்ளது.
இதுவரை ஒரு கன மழை கூட பெய்யவில்லை. வட தமிழகத்தில் இதுவரை இயல்பான அளவில் கூட மழை பெய்யவில்லை. காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சற்று பெய்துள்ளது என்றாலும் கூட இதுவரை பற்றாக்குறை மழைதான் அங்கு பெய்துள்ளது.
இந்தநிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக இரவில் நன்றாக குளிர்கிறது. பனி கொட்டுகிறது. பகலிலோ பெரும்பாலும் வாடைக்காற்று வீசுகிறது. பகலில் மழை இல்லை.மாறாக லேசான வெயிலும், வாடைக்காற்றுமாக இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலம் போய்க் கொண்டுள்ளது.
இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் பனிமூட்டம் வாகன ஓட்டுநர்களை சிரமத்துக்குள்ளாக்கி வருகிறது. நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலை, நாகர்கோவில் - பூதப்பாண்டி நெடுஞ்சாலை, கன்னியாகுமரி - நாகர்கோவில் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. காலை 9 மணி வரையிலும் பனி மூட்டம் நிலவியதால் சாலைகளில் பயணித்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
வழக்கமாக மார்கழியில்தான் பனி வரும், குளிர் நடுங்கும். ஆனால் தற்போது பனி மூட்டம் வந்து விட்டதாலும், பனி கொட்டுவதாலும் மிச்சமிருக்கும் மழையும் குறையும் என மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
2 நாட்களுக்கு மழை
இதற்கிடையே வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழ்வு காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 21ம் தேதிக்குப் பிறகு இந்த மழை குறையும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.