பள்ளிக்கரணையில் மழை வெள்ளம் சூழ்ந்தது.. வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி
சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களை சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது. பள்ளிக்கரணையில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்திருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் புகுந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக வேளச்சேரி, தரமணி ஆகிய பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.
வேளச்சேரிக்கு அடுத்துள்ள பள்ளிக்கரணையில் ஐஐடி காலனி, காமகோடி நகர், விஜிபி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இதேபோல மேலும் பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பல முக்கியச் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.