தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் - வானிலை மையம்
குறைந்த காற்றழுத்த நிலையால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: வளிமண்டல கீழடுக்கு பகுதியில் தெற்கு கர்நாடகம் முதல் தெற்கு தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தென் மாவட்டங்களில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த நிலையால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்பகோணத்தில் 16 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. பாம்பனில் 11 செ.மீ., கொடைக்கானலில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. மதுரை மற்றும் அவினாசியில் 9 செமீ மழையும், திருப்பூர், பெரியகுளம், மணியாச்சியில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரையில் தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 48% அதிகம் பெய்துள்ளது என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கனமழையால் கொடைக்கானலில் மண் சரிவு காணமாக பெரியகுளம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளன