சூறாவாளியுடன் கனமழை... ஆறுகளில் வெள்ளம்: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: கனமழையால் தாமிரபரணியில் ஒருபக்கம் வெள்ளம் பெருக்கெடுக்க, சுழன்றடித்த சூறாவளியால் கதிகலங்கி போயுள்ளனர் தூத்துக்குடி மாவட்ட மக்கள். தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை ஒரு மணியளவில் சூறாவளி காற்று அடித்ததில் சோரீஸ்புரம் பகுதியில்20 க்கும் மேற்பட்ட வீடுகளில் போடப்பட்டிருந்த தகரம், அஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் காற்றில் பறந்தன.
சோரீஸ்புரம், கோரம்பள்ளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேராடு சாய்ந்தது. அதிகாலை நேரம் சூறாவளி காற்று வீசியதால்,உயிரிழப்பு இல்லை. பொருட்கள் சேதத்துடன் தப்பியது.
நெல்லையில் தொடர் மழை
நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் 32 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நத்தம் பகுதியில் உள்ள பாலத்தை தாண்டி வெள்ள நீர் ஓடுகிறது. இதனால், ஆற்றின் கரையோரம் உள்ள சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலடுக்கு சுழற்சி
கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தொடர்மழையால் விடுமுறை
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி தென் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.