வருண பகவானின் புண்ணியத்தில்... ‘மடை திறந்த வெள்ளம் போல்’ தீபாவளியைக் கொண்டாடிய சென்னை மக்கள்!
வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளிப் பண்டிகை மழையின் இடையூறு இல்லாமல் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை: தீபாவளி பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வடகிழக்குப் பருவமழை ஒருநாள் தாமதமாக இன்று தொடங்கியதால் மழையின் இடையூறு இன்றி மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளிப் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் சாப்பிட்டு, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடினர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை காலத்தில் தீபாவளிப் பண்டிகை வந்தது. சென்னையின் புறநகர் உட்பட பல இடங்களில் அப்போதே மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது.

மழை வருமோ...
எனவே, பட்டாசுகள் வெடிக்க இயலாமல், வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கினர். அதனைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே வெள்ள பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் இந்தாண்டு தீபாவளி பண்டிகை குறித்தும், வடகிழக்குப் பருவமழை குறித்தும் மக்கள் கவலையுடனேயே இருந்தனர்.

அச்சம்...
ஆனால், தீபாவளி முடிந்த மறுநாளே வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்தது. ஆனபோதும் சென்னை உட்பட சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனவே இந்தாண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தையும் மழை கெடுத்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்தது.

மக்கள் ஹேப்பி...
இந்நிலையில், நேற்று மழை இல்லாமல் வானம் தெளிவாகவே வெயிலடித்தது. இதனால், மக்கள் உற்சாகத்துடன் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்றும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

பட்டாசு வெடித்து உற்சாகம்...
கடந்தாண்டிற்கும் சேர்த்து மக்கள் தீபாவளியைக் கொண்டாடியது போன்று நேற்று காணப்பட்டது. வான் எங்கும் வண்ண வண்ண மத்தாப்புக்கள் நட்சத்திரங்கள் போல் மிளிர்ந்தது. சாலைகள் எங்கும் பட்டாசுக் குப்பைகளாகக் காணப்பட்டது.

போனஸ் விடுமுறை...
அதோடு, இந்தாண்டு வார இறுதி நாளான விடுமுறை நாளில் தீபாவளி வந்தது. இதனால் அலுவலகங்களில் கூட ஒருநாள் விடுப்பு கேட்கும் அவசியமின்றி, ஞாயிறும் போனசாக விடுமுறை கிடைத்து விட்டது. எனவே, வெளியூர் சென்றவர்கள் இந்தத் தீபாவளியைக் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடினர் என்றால் மிகையில்லை.












Click it and Unblock the Notifications