சென்னையில் விட்டு விட்டு கனமழை... : வெள்ளம் வடிவது எப்போது?
சென்னை: சென்னை: சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை, மழை ஆபத்து நீங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆறுதலாக அறிவித்தாலும் கார்த்திகை மாத கனமழை கச்சேரி விட்டபாடில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நட்சத்திரங்களுடன் வானத்தை பார்த்த சென்னைவாசிகள், இரவில் திடீரென இருண்ட வானத்தைப் பார்த்து மிரண்டுதான் போனார்கள்.
எதிர்பார்த்தது போலவே அதிகாலை முதல் சாரல் மழையாக தொடங்கி இப்போது விட்டு விட்டு கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், அண்ணாசாலை, வடபழனி, கிண்டி, சூளைமேடு, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் கொட்டியது.
பிபிசி எச்சரிக்கை
தமிழக தலைநகரான சென்னையில் கடந்த இருநாட்களாக வெள்ளம் லேசாக வடியத்தொடங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் புதன்கிழமை முதல் அடுத்த இருநாட்களுக்கு சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இங்கிலாந்தின் பி.பி.சி. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
சென்னை வானிலை அறிக்கை
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்துக்கு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். தென்தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர்த்து பிற மாவட்டங்களிலும் மழை பெய்யும். சென்னைக்குட்பட்ட சில பகுதிகளில் அவ்வப்போது லேசாக மழை பெய்யும் என்று செவ்வாய்கிழமை அறிவித்தது.
கனமழை கச்சேரி
சென்னையில் திங்கட்கிழமை தொடங்கி நேற்றிரவுவரை நட்சத்திரக் கூட்டங்களுடன் தெளிவாக தெரிந்த வானம், பின்னிரவு வேளையில் மீண்டும் கருமேகங்கள் திரண்டன. புதன்கிழமை அதிகாலையில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு,விட்டு லேசான தூரலுடன் மழை தனது கார்த்திகை மாத கச்சேரியை தொடங்கியது. திடீரென்று கனமழை கொட்டியது.
சென்னைவாசிகள் பீதி
இதனால் பி.பி.சி கணிப்பு பலித்து விடுமோ என்று சென்னைவாசிகள் பீதியடைந்தனர். திடீர் திடீரென கொட்டி விட்டு செல்லும் மழையால் வெள்ளம் வடிந்த சாலைகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. காலை நேரத்தில் அலுவலகத்திற்கு சென்றவர்களும், வாகனங்களில் சென்றவர்களும் அவதிக்கு ஆளாகினர்.
பரவலாக மழை
சென்னையில், கிண்டி, அடையாறு, மைலாப்பூர், மந்தவெளி, அண்ணாசாலை, எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம்,சைதாப்பேட்டை, வடபழனி, திருவெற்றியூர்,தாம்பரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பரவலாக பெய்த மழையால் சென்னைவாசிகள் மீண்டும் பீதிக்கு ஆளாகினர்.
வானம் மேகமூட்டம்
கடந்த 2 தினங்களாக வெயில் தலைகாட்டிய நிலையில் காலை முதலே சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் கொட்டியதால் பல இடங்களில் தேங்கியுள்ள வெள்ளநீர் வடியவில்லை. வேளச்சேரி, விருகம்பாக்கம், மடிப்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னமும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வானம் மேக மூட்டத்துடன் எப்போது வேண்டுமானலும் மழை வரும் என்று அச்சுறுத்திக்கொண்டுள்ளது.
நீர் திறப்பு அதிகரிப்பு
சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் மீண்டும் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையைச் சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 3,700 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், அது 4,202 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 178 கனஅடியில் இருந்து 798 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.புழல் ஏரியில் இருந்து 850 கனஅடியும், சோழவரம் ஏரியில் இருந்து 400 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.