தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு... ஒரு வாரத்தில் பனி குறையும்- வானிலை மையம்
தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பனி குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் வடகிழக்குப் பருவமழைக்காலம் முடிந்த பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே பனி காலம் துவங்கியுள்ளது. 8 மணிவரைக்கும் சூரியனை பார்ப்பது அரிதாக உள்ளது. சென்னை புறநகரில் மூடுபனியால் விமானங்கள் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே பனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. ஊரே ஏசி போட்டது போல குளிருவதால் வீட்டிற்குள் ஃபேன் போடாமல் மின்சார செலவும் மிச்சமாகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் குறைவான வெப்பநிலை நிலவும். பனி ஒருவாரத்தில் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளது: தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் குறைவான வெப்பநிலை நிலவும். சென்னை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மூடுபனி இருக்கும். சென்னை, நீலகிரியில் அதிகமான மூடுபனிக்கு வாய்ப்புள்ளது. இன்னும் ஒருவாரத்தில் பனி படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடற்கரையில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.