கிருஷ்ணகிரியில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரியில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பக் காற்று வீசி வந்தது. இதனால் வெயில் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். அதுமட்டுமின்றி மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டதால் விவசாயிகளும் பாதிப்படைந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென கிருஷ்ணகிரி, வள்ளுவர்புரம், மேகலசின்னம்பள்ளி, வரட்டனப்பள்ளி, மற்றும் மகாராஜகடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.