சென்னையில் லேசான மழைதான்.. குளு குளு காற்று வீசியதால்.. வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் லேசான மழை பெய்தது. எனினும் குளு குளு காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: வாட்டி வறுத்தெடுக்கும் வெயிலுக்கு நடுவில் இன்று லேசான மழை சென்னையில் பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சும்மாவே வெயில் போட்டு தாக்கி வந்த நிலையில், அக்னி நட்சத்திர வெயில் கூடுதலாக தமிழக மக்களை வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மோரா புயல் உருவாகியுள்ளது என்று வானிலை மையம் அறிவித்தது. மேலும், எண்ணூர், கடலூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதே தட்ப வெப்பம்
ஆனால், தமிழகத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலையில் பெரியதாக மாற்றம் இருக்காது என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. அது போன்ற பெரிய மழை எதுவும் தமிழகத்தில் பொழியவில்லை.
சென்னையில் குளு குளு
என்றாலும், சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணுர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கத்தரி வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கனமழையால் பூமி குளிர்ந்து..
இதனைப் போன்றே சென்னையை அடுத்த பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பூமி தற்போது குளிர்ந்து வருகிறது.
தென்காசியில் சீசன்
தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் சாரல் மழையுடன் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.