சென்னையில் இரவில் வெளுத்து வாங்கிய மழை.. மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. இன்று இரவு சென்னையில் மழை பெய்யும் என வானிலை இலாகா முன்னெச்சரிக்கை செய்திருந்த நிலையில், அதை மெய்ப்பிப்பதை போலவே இன்று இரவு 10 மணியளவில் நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்தது.
நகரின், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், பல்லாவரம், அம்பத்தூர், ஆவடி, மதுரவயல், பூவிருந்தவல்லி, துரைப்பாக்கம் மற்றும் திருத்தணி பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
இரவு முழுக்க மழை விட்டுவிட்டு தொடரும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையயே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் அனைத்தும் சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் கம்பெனியில் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், இங்கு தயாரிக்கப்பட்ட 90 டன் எடையுடைய ராட்சத பாய்லர் 96 டயர்களை கொண்ட கன்டெய்னர் லாரி மூலம் ஏற்றப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கடந்த வாரம் புறப்பட்டது.
இந்த லாரி, இன்று இரவு பொன்னேரிக்கு புறப்பட்டு அங்கிருந்து தச்சூர் கூட் ரோடுக்கு சென்று நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீஹரிகோட்டாவை சென்றடைகிறது. லாரி செல்வதற்கு ஏற்ற வகையில், மின் வயர்கள் அகற்றப்படுவதால் மின்சாரம் துண்டிக்கப்படும்.
எனவே, பொன்னேரி வேண்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்துக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மின்சாரம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.